இலங்கை ஒரு விவசாய நாடு என்கின்ற வகையில் நாட்டிலே இடம்பெற்று வந்திருக்க கூடிய நெற்செய்கை உள்ளிட்ட மரக்கறிகள் வரையான விவசாய உற்பத்திப் பொருட்கள் வாசனைத்திரவிய உற்பத்தி அனைத்துமே விவசாயிகளால் தமது நிலத்தில் சொந்தமாக மேற்கொள்ளப்பட்ட ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. அவற்றை மேம்படுத்தும் வகையில் அரச நிறுவனங்கள் அமையப்பெற்றன. விவசாயத்திணைக்களம், கமத்தொழில் சேவைத் திணைக்களம் போன்றன குறிப்பிட்ட துறைகளை ஊக்குவிப்பதற்கான அரச பொறுப்பு நிறுவனங்களாக அமைந்தன.
ஆனால்,பெருந்தோட்டத்துறையைப் பொறுத்தவரை அவை ஆரம்பம் முதலே முதலாளிகளுக்குச் சொந்தமான தொழில் துறையாகவும் அதில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தமது உழைப்பை விற்று கிடைக்கும் கூலி வருமானத்தில் தமது வாழ்வாதாரத்தை கொண்டு நடாத்துபவர்களாக இருந்து வந்துள்ளனர். பிரித்ததானியர் காலத்தில் மிக இறுக்கமாக இந்த நிர்வாகக் கட்டமைப்பு அமைந்தது. எனவே சுயாதீன கிராமிய பொருளாதாரததில் வாழ்ந்து வந்த இலங்கை மக்கள் பிரித்தானியரின் இந்த நிர்வாக இறுக்கத்துடன் கூடிய தொழில் துறையை விரும்பியிருக்கவில்லை. எனவேதான் இந்தியாவில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வந்து தமது தொழிலை முன்னெடுக்கும் தேவை பிரித்தானியருக்கு ஏற்பட்டது. எனவே உள்நாட்டு மக்கள் ஆரம்பம் முதலே அந்நிய முதலீட்டிநாளும் அந்நிய உழைப்பினாலும் உருவாக்கப்பட்ட ஒரு தொழில் துறையாக அடையாளம் காணப்பட்டு அத்தகைய பெருந்தோட்டப் பொருளாதாரத்திற்கு எதிரான மனநிலையையே காணப்பட்டது. இன்றும் காணப்படுகின்றது.
பிரித்தானியர்களின் வெளியேற்றத்துடன் அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேறிவிட்டார்கள் என்கிற உணர்வு அவர்களுக்கு ஏற்பட்டது. ஆனால், அந்நியராகவந்த தொழிலாளர்கள் வெளியேறவில்லை என்கிற மனநிலை அவர்களிடம் இருந்தது. அதனால்தான் சுதந்திரம் அடைத்த அதே வருடத்தில் இலங்கை குடியுரிமையை அவர்களிடம் இருந்து பறித்தெடுத்தது. அந்த நாள் வரை கணக்கெடுத்தாலே தேயிலைக் கைத்தொழில் ஆரம்பித்த நாளில் இருந்து இந்திய தொழிலாளர் மக்கள் இலங்கை நாட்டில் எண்பது வருடங்கள் வாழ்ந்திருந்தனர்.
வரலாற்றின்படி தேயிலைக்கு முன்பதாக கோப்பிக் காலத்திலேயே இந்திய தொழிலாளர் மக்கள் இலங்கை வந்திருந்தனர் என்று பார்த்தால் இலங்கையில் இந்திய தொழிலாளர்களான மலையக மக்களின் குடியுரிமை நீக்கப்படும்போது அவர்கள் இலங்கையில் 100 ஆண்டு காலம் வாழ்ந்துவிட்டனர். அந்த நூறாண்டுகால வாழ்வில் 1930 க்கும் 1948 க்குமான காலப்பகுதியான 18 ஆண்டுகள் சர்வஜன வாக்குரிமையின் கீழ் வாக்குரிமை பெற்றவர்களாக வாழ்ந்து விட்டனர். எனினும் அவர்களை அந்நியர்களாகவே பார்த்துப் பழகிய உள்நாட்டு சக்திகள் அந்நிய முதலீட்டைச் செய்த பிரிதானியர் வெளியேறிச் சென்றதோடு அவர்கள் அழைத்து வந்த உழைப்பாளர்களையும் வெளியேற்றவேண்டும் என தீர்மானித்தனர். அதன் முதல்படிதான் குடியுரிமை பறிப்பு. பின்னாளில் மிகுந்த போராட்டங்களுக்கு மத்தியில் 1980 களுக்குப்பின்னர் குடியுரிமை கிடைக்கப்பெற்றதை மலையக மக்களுக்கு குடியுரிமை கிடைத்து விட்டது அல்லது பெற்றுக்கொடுத்துவிட்டோம் என்பதே தவறான பிரயோகம்தான். மாறாக மலையக மக்களுக்கு பிரஜாவுரிமை மீளவும் கிடைத்தது அல்லது பெற்றுக்கொடுக்கப்பட்டது என்பதே சரியானதாகும்.
இவ்வாறு, வாக்குரிமை மீளக்கிடைக்கப்பெறும் காலத்தில் அதாவது 1948 க்கும் 1980 க்கும் இடைப்பட்ட 30 வருட காலத்தில் இடம்பெற்றிருந்த இன்னொரு திட்டமிடப்பட்ட செயற்பாடுதான் 1964ஆண்டு செய்துகொள்ளப்பட்ட சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம். இதன் மூலமாக குடியுரிமை பறிக்கப்பட்ட மக்கள் அத்தோடு நிறுத்தப்படாமல் இலங்கையை விட்டு நாடு கடத்தப்படனர். ஒப்பந்தப்படி விருப்பத்தின் பேரில் சென்றதாகச் சொல்லப்பட்டாலும் அவர்கள் அவ்வாறு செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். சுமார் ஐந்து இலட்சம் அளவான சனத்தொகை இவ்வாறு திருப்பி அனுப்பபட்டார்கள். இவ்வாறான திருப்பி அனுப்புதலின் அரசியல் சார் விளைவுகள் மலையக மக்கள் விடயத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது
1961 ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பில் இலங்கையின் இரண்டாவது, அதிகளவான சனத்தொகையாக இருந்த இந்தியத்தமிழர் எனப்படும் மலையக மக்கள் 1981ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பில் நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டது தற்செயல் நிழ்வு அல்ல.
இந்த இரண்டு நிகழ்வுகளையும் தொழில்சார்ந்த அடிப்படையில் பார்த்தால் குறித்த பெருந்தோட்டத் கைத்தொழில் 150 வருட காலத்தில் எவ்வாறு வீழ்ச்சிப்போக்கில் சென்றிருக்கும் என்பதை அவதானிக்கலாம். 1948 இலங்கைக்கு சுதந்திரத்தை வழங்கி பிரித்தானிரயர் வெளியேறினாலும் அவர்களின் முதலீடும் நிர்வாகமும் 1972ஆம் ஆண்டுவரை இருந்தது. அதேபோல 1948 இல் குடியுரிமை பறிக்கப்பப்பட்டு 1964இல் நாடு கடத்தும் தீர்மானம் எடுக்கப்பட்டாலும் அது நடைமுறைக்கு வந்தது 70களிலேயே. எனவே தொழில் துறை ஓரளவு நின்றுபிடித்தது.
எனினும் 1972 ஆம் ஆண்டு காணி உச்சவரம்பு சட்டத்தின் வருகையோடு பிரித்தானியர் பெருந்தோட்டக்கைத் தொழிலில் இருந்து விலகிச் செல்ல இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட அவர்களை பொறுத்தவரை அந்நிய முதலீடும், அந்நிய உழைப்பும் ஓரளவுக்கு வெளியேற்றப்பட்டுவிட்டது இனி இந்த பெருந்தோட்டக் கைத்தொழிலை தாம் கைப்பற்ற வேண்டும் என்பதுதான். இந்தப் பின்னணியில் உருவானது தான் சிறுதோட்ட உடமையாளர்கள் எனும் திட்டம். இதனை மேற்பார்வை செய்வதற்கும் ஊக்குவிப்பதற்கும் அரசாங்கம் அவ்வப்போது உதவ தொடங்கியது.
No comments:
Post a Comment