Saturday, 9 September 2017

மத்திய அதிவேக பாதை பணிகள் சட்ட திட்டங்களுடன் முன்னெடுப்பு

மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டம் உரிய சட்டங்களுக்கு அமைவாகவே முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பில் சில ஊடகங்கள் விஷம பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று விசேட உரையாற்றிய பிரதமர், மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டம் குறித்து கடந்த சில வாரங்களாக ஊடகவலையமைப்பொன்றினால் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டமிடப்பட்ட சேறுபூசும் பிரசாரம் தொடர்பில் விளக்கமளித்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தொடர்ந்தும் பேசுகையில், மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கி நிறுவனம் ஆரம்பத்தில் முன்வைத்த தொகையைவிடவும் 25 பில்லியன் ரூபா குறைவாக இந்த திட்டத்தை வழங்குவதற்கு எம்மால் முடிந்திருந்தது. இலங்கை அரசும் ஜப்பான் அரசும் தலையிட்டிருந்தமையால் இந்தத் திட்டம் தொடர்பில் சாதகமான மாற்றங்கள் பலவற்றை ஏற்படுத்திக் கொள்ள சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. அதற்கமைய ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்த 'டயிசேயி' நிறுவனத்துடன் பேசி, 25 பில்லியன் ரூபா செலவை குறைத்துக் கொள்ள இலங்கை அரசாங்கத்துக்கு முடிந்திருந்தது.

25 பில்லியன் ரூபா செலவை குறைத்ததையிட்டு இந்த ஊடக வலையமைப்புக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. நாட்டுக்கு 25 ஆயிரம் பில்லியன் ரூபா என்ற தொகையை சேமித்துக் கொடுத்தமைக்காக இந்த நிறுவனம் எமக்கு அவமதிப்புக்களை ஏற்படுத்துகிறது. அது மட்டுமல்லாது இதன் நிமித்தம் அவர்கள் பொய்யான பல்வேறு தகவல்களையும் கூறுகின்றனர். இந்த நிர்மாண ஒப்பந்தம் வழங்கப்பட்ட டயிசேயி நிறுவனம் ஆரம்பத்தில் 159 பில்லியன் ரூபாவிலான விலை கோரலையே முன்வைத்திருந்தது.


எனினும், ஜப்பான் அரசினதும் எமது நெடுஞ்சாலைகள் அமைப்பினதும்
தலையீட்டையடுத்து அவர்களுடன் பேசியதன் பின்னர் அந்தத் தொகையை 134 பில்லியன் ரூபாவாக குறைத்துக் கொள்ள முடிந்திருந்தது. எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கொழும்பு-கண்டி அதிவேக நெடுஞ்சாலை தொடர்பில் மக்களுக்கு உறுதிமொழியொன்றை வழங்கியிருந்தோம். இந்த நெடுஞ்சாலையானது தனியொருதிட்டம் கிடையாது. அது கண்டி நகர அபிவிருத்தி திட்டத்தின் ஒரு அங்கமாகும். இரு ஜப்பான் நிறுவனங்கள் மட்டுமே இத்திட்டத்துக்கான விலைமனு கோரலை முன்வைத்திருந்தன. அதன் பிரகாரம் புஜிட்டா நிறுவனம் 147 பில்லியன் ரூபாவிலான விலை மனு கோரலையும், டயிசேயி நிறுவனம் 159 பில்லியன் ரூபாவிலான விலை மனுகோரலையும் முன்வைத்திருந்தன.

இதற்கமைய குறைவான விலைமனு கோரலை முன்வைத்த புஜிட்டா நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை வழங்குவது பொருத்தம் என 2016-12-06 தினத்தன்று அமைச்சரவை தீர்மானித்திருந்தது. எனினும், குறைவான விலைமனு கோரலை முன்வைத்த புஜிட்டா நிறுவனம் மிகவும் முக்கியமான இருகாரணிகள் தொடர்பாக தகுதிகளைப் பூர்த்திசெய்திருக்கவில்லையென அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட பேச்சுவார்த்தை குழு இச்சந்தர்ப்பத்தில் கூறியது.

கடந்த 10 வருடங்களில் புஜிட்டா நிறுவனம் இவ்வாறான பாரிய நெடுஞ்சாலை நிர்மாணங்களை மேற்கொண்டிருக்காமை இதற்கு காரணமாக அமைந்திருந்தது. இந்த நிலைமை அவர்கள் அமைச்சரவைக்கு அறியத் தந்தனர். இவ்வாறான நிலையில் மற்றைய நிறுவனமான டயிசேயி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதே அடுத்ததாக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கையாக இருந்தது. அவர்களுடன் பேசி தொகையை குறைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும் என பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவை குழு 2017-01-04 தினத்தன்று தீர்மானித்தது.

 இந்தத் தீர்மானத்துக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்தது. டயிசேயி நிறுவனம் தமது தொகையை குறைப்பதற்கும் 365 நாட்களுக்குள் நிர்மாண பணிகளை தமது நிதியின் கீழ் ஆரம்பிக்கவும் இணக்கம் தெரிவித்தமையால் அவர்களுக்கு ஒப்பந்தத்தை வழங்குவது பொருத்தமாக இருக்கும் என அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட பேச்சுவார்த்தை குழு 2017-03-17 தினத்தன்று அமைச்சரவைக்கு பரிந்துரை செய்திருந்தது என்றார். இதேநேரம், இந்த நிர்மாணப் பணிகளில் புஜிட்டா நிறுவனத்தையும் இணைத்துக் கொள்வது தொடர்பில் அரசாங்கம், ஜப்பான் அரசுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியிருந்ததுடன், அதன் பின்னரான நடவடிக்கைகளையடுத்து, அதற்கு இணக்கத்தை வெ ளியிட்டிருந்த ஜப்பான், இலங்கையில் இருக்கும் சட்டதிட்டங்களுக்கு அமைய பொருத்தமான நடவடிக்கையொன்றை எடுக்குமாறு தெரிவித்திருந்தாகவும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார். மகேஸ்வரன் பிரசாத்   தினகரன்

No comments:

Post a Comment

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...