![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0riEw9MA5hoEzXE2Nh7Vuo9LjhAt4wdCiNF-IY493GGv-Sa0GUGk1MrJRGvDX7kBWZ0POLlT0c9e4Vft_0vYktFyK_honH-dctGw_kMR_nWSk_0Eb6mNnPO8ys9kvnCDypv6wCpdeJKo/s640/13137_content_galle_flood_thinakkural_06-09-2017.jpg)
காலி மாவட்டத்தில் தாழ் நில பிரதேசங்கள் பலவும் வெள்ளத்தில மூழ்கியுள்ளன. நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு முதல் தென்மாகாணத்தில் கடும் மழையுடன் கூடிய காலநிலை நிலவிவருகிறது. இதன்படி நேற்று அதிகாலை வரை அந்த மாகாணத்தின் பல இடங்களிலும் 100 முதல் 200 மில்லி மீற்றர் வரையான மழை பெய்துள்ளதாக வானிலை அவதான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, காலி மாவட்டத்தில் நாகொட மற்றும் யட்டலமத்த ஆகிய பிரதேசங்களில் அதிக மழை பெய்துள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதனால் காலி மாவட்டத்தில் தாழ்நில பிரதேசங்களும் வீதிகள் பலவும் நீரில் மூழ்கியுள்ளன. இவ்வாறாக காலி நகரம் , கராபிட்டிய , மாபலாகம, பத்தேகம, நெலுவ , தங்கெதர உள்ளிட்ட பிரதேசங்களில் தாழ்நில பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
இதேவேளை இந்தப் பிரசேங்களில் வீடுகள் பலவும் நீரில் மூழ்கியுள்ளதுடன், இந்த வீடுகளில் வசித்தோரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கையெடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், இந்த பிரதேசங்களில் பிரதான வீதிகளும் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் இந்த வீதிகளினூடான வாகனப் போக்குவரத்துகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளன. இந்தப் பிரதேசங்களில் ஆறுகளும் ஓடைகளும் பெருக்கெடுத்தமையினாலேயே அங்கு வெள்ள நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், கடலை அண்மித்த பிரதேசங்களில் வெள்ள நீரை கடலுக்கு அனுப்பும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறாக அங்கு மழையுடன் கூடிய காலநிலை தொடரும் பட்சத்தில் வெள்ள நிலைமை மோசமடையலாம் என தெரிவிக்கப்படுவதுடன் இதனால் எந்தவேளையிலும் அவசர நிலைமைக்கு முகம்கொடுப்பதற்குத் தயாராக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் காலி மாவட்ட செயலக அதிகாரிகளுக்கும் அந்த மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலக அதிகாரிகளுக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. தினக்குரல்
No comments:
Post a Comment