
பெருந்தோட்ட பிரதேசங்களின் அபிவிருத்திகளுக்கு, பிரதேச சபைகள்
நிதியுதவி வழங்க முடியாதென்ற 1987ஆம் ஆண்டின் பிரதேச சபை சட்டத்தில், திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் வலியுறுத்தலின்படி உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா இதற்கான ஆலோசனையை நேற்று அமைச்சரவையில் சமர்ப்பித்தார்.
இதன் மூலம் 1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 33ஆம் பிரிவு திருத்தப்படுவதுடன், வர்த்தமானியில் இது அறிவிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்.
இது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் கூறியதாவது,
நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை, மொனராகலை, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, கொழும்பு, காலி, மாத்தறை, குருநாகல் ஆகிய மாவட்டங்களில் உள்ள பெருந்தோட்ட புறங்களில் வாழும் மலையக தமிழ் மக்கள் பிரதேச சபை தேர்தல்களில் வாக்களித்து உறுப்பினர்களை தெரிவு செய்யலாம். எனினும் பெருந்தோட்டங்களின் அபிவிருத்திகளுக்கு பிரதேச சபைகள் நிதியொதுக்க முடியாதவாறு 1987 ஆம் ஆண்டின் சட்டம் தடுத்தி ருந்தது.