வாரமஞ்சரி :பன்.பாலா:
கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி
இராதாகிருஷ்ணன் பெருந்தோட்டப் பாடசாலைகளின் வள அபிவிருத்திக்காக தேவையான
காணிகளைப் பெற்றுக் கொள்வதில் பெரும் சங்கடங்களை எதிர்நோக்குவதாக அண்மையில்
தெரிவித்திருந்தார். வரவு செலவுத் திட்டங்களில் மலையகப் பெருந்தோட்டப்
பாடசாலை அபிவிருத்திக்காக நிதியொதுக்கீடு செய்யப்படுகின்றது. மாகாணசபை
மட்டத்திலும் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. நிதி ஒதுக்கீடுகளும்
நடைபெறுகின்றன. இருந்தும் இதற்கான காணிகளைப் பெற்றுக் கொள்வதில்தான்
முட்டுக்கட்டைகள் நிலவுகின்றன.
காணிகளை குத்தகைக்கு எடுத்துள்ள 22
கம்பனிகளும் இதில் இறுக்கமான நடைமுறையையே கையாள்கின்றன. 1992 ஆம் ஆண்டு
பெருந்தோட்டங்களை அரசாங்கம் தனியார் கம்பனிகளிடம் குத்தகைக்குக் கொடுத்தது.
அப்போது தோட்ட மக்களின் சகல தேவைகளையும் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு
கம்பனிவசம் சார்ந்தது. அரசாங்கத் தரப்பிலும் கம்பனிகள் தரப்பிலும் பல்வேறு
உறுதிமொழிகளும் வழங்கப்பட்டன. பெருந்தோட்டத் துறையை இலாபகரமான
தொழிற்றுறையாக மாற்றுவதும் அதன்மூலம் தோட்டத் தொழிலாளரின் வாழ்வியலை
மேம்படுத்துவதுமே தோட்டங்களைக் கைமாற்றம் செய்வதன் நோக்கம் என அரசு
தரப்பில் வியாக்கியானம் தரப்பட்டது. இதற்கு சகல ஒத்துழைப்புகளும் தாம்
வழங்கத்தயாராக இருப்பதாக தோட்டக் கம்பனிகள் சான்றுரைத்தன.
இவையெல்லாவற்றையும் ஆமோதிப்பது போல மலையக தொழிற்சங்கங்கள் மெளனம் சாதித்தன.
ஆனால் உறுதிமொழி வழங்கியபடி எதுவுமே
நடைபேறவில்லை. பிரிட்டிஷார் காலத்தில் மலையக மக்களுக்குச் சொந்தமானவை என
கருதப்பட்ட லயக்குடியிருப்புகள் இன்று தோட்டக் கம்பனிகளுக்கு
உரித்தாக்கப்பட்ட நிலைமையே காணப்படுகின்றது. ஏனெனில் இன்றைய நிலையிலும் கூட
அறைகளைப் பெருப்பித்தல், வீட்டை விசாலமாக்கல் தோட்ட நிர்வாகங்கள்
அனுமதித்தால் மட்டுமே செய்யக்கூடியதாக உள்ளது.